Saturday, June 18, 2011

“நான் அதுவே”

தினம் விழித்தவுடன், சாதாரணமாக நாம் செய்யும் காரியம் என்ன? கண் விழிப்பதால் நாம் எதையோ பார்க்கிறோம். சரி, அது எதுவானாலும் அதைப் பார்க்க ஒளி வேண்டும் அல்லவா? அந்த ஒளியானது காலையில் என்றால் சூரியனிடமிருந்தும், இரவு என்றால் ஏதோ ஒரு விளக்கிலிருந்தும் கிடைக்கிறது. ஒளி மட்டும் இருந்தால் போதுமா? ஒளி விழும் அந்தப் பொருளை எப்படிப் பார்க்கிறது? நமது கண்ணினால்தான். கண் மட்டும் இருந்து அது குருடாயிருந்தால்? ஆக அந்தக் கண்ணுக்குக் காணக் கூடிய சக்தியும், மூளை, நரம்பு உள்பட எல்லா உறுப்புகளும் சரியாக வேலை செய்யவேண்டும். இதுவரை நாம் பார்த்தது ஒரு காட்சிக்கு தேவையான உபகரணங்களைப் பற்றியது. எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனாலும் பல சமயம் ஒரு பொருள் நம் பக்கத்தில் இருந்தாலும், நாம் அதைக் காண்பதில்லை. ஏன்? கவனிக்கவில்லை என்போம். அதாவது நம் மனம் அதில் ஈடுபடவில்லை என்கிறோம். இதைத்தான் உள்ளுணர்வாகிய மதி என்கிறோம். கவனித்தல் என்பதும் நாம் அதை மதிக்கிறோம் என்பதும் ஒன்றேதான். ஆனாலும் ஒன்றை மதித்துப் பார்க்கும் முன்னமே, நாம் விழித்ததும் “நான்” என்ற உணர்வு அவரவர்களுக்கு வந்து விடுகிறதல்லவா? அந்த “நான்” என்ற உணர்வுதான் உண்மையான ஒளி என்று குரு சொல்ல, கல்வி கற்றுச் சிறந்த சீடனும் “நான் அதுவே” என்கிறான்.

No comments:

Post a Comment