Thursday, May 26, 2011

கலி காலம் !! ??...



லி முத்திவிட்டது என பெரியவர்கள் சொல்வதற்கு என்ன காரணம்? கலிகாலம் என்பது அத்தனை கேடானதா? அதன் அடையாளம் என்ன என்பதை தெரிந்து கொள்ள பலருக்கு ஆர்வம் இருக்கும்

ஒவ்வொரு யுகத்திற்கும் யுக தர்மம் என்று ஒன்று உள்ளது.

தனிமனித வாழ்க்கையில் காலம் தோறும் கடமைகள் மாறுவது போல் யுகம் தோறும் தர்மங்கள் மாறும் என சாஸ்திரம் சொல்கிறது.

ஒரு காலத்தில் சரியாகயிருந்தது இன்னொரு காலத்தில் சரியாக இருக்காது.

ஒரு நாட்டில் ஒழுக்கம் பண்பாடு என்று சொல்லப்படுபவைகள் வேறொரு நாட்டில் காட்டுமிராண்டி தனமாகவும், சட்ட விரோதமாகவும் இருக்கலாம்.


அதே போன்று தான் யுக தர்மம் என்பது.

விஷ்ணு புராணத்தில் பராசரர் கலியுகத்தின் நிலை இப்படித்தான் இருக்குமென தெளிவான சில விவரங்களை தருகிறார்.

கலிகால மனிதனின் வாழ்ககை ஒரேயொரு லட்சியத்தை நோக்கியதாக இருக்காது.

தர்மத்திற்கு சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளக்கங்கள் கொடுக்கப்படும்.

வேதங்கள் காட்டிய நெறி முறைகள் நடைமுறையில் இருக்காது.

கணவன் மனைவியிடத்திலும், குரு சிஷ்யனிடத்திலும், ஆள்பவன் ஆளப்படுபவனிடத்திலும் இணக்கமான சூழ்நிலையிறாது.


பரஸ்பரம் சுயநலமே மேலோங்கி நிற்கும்.

மனிதர்கள் தான் நினைப்பதை சொல்வதை மட்டுமே தக்க நியாயம் என்பார்கள்.

தனது மனதிற்கும் உடலுக்கும் வசதியாக எது இருக்கிறதோ அதையே தர்மம் என்று சாதிப்பார்கள்.

உபவாசம், தீர்த்தயாத்திரை, தானங்கள், ஜெபதபங்கள் போன்றவற்றை தங்களின் தேவைக்கு ஏற்றவாறு வைத்துக் கொண்டு ஜம்பம் பேசுவார்கள்.

காலனா கையில் வந்தால் எட்டனா வீரம் பேசுவார்கள். கர்வம் கொள்வார்கள்.

பெண்களை பொறுத்த வரை பண்பு தான் அழகு என்பது மாறி உடல் தான் அழகு என்ற நிலை ஏற்படும்.


சம்பாதிக்காத புருஷன் மனைவிமாரால் கழுத்தை பிடித்து தள்ளப்படுவான்.

அன்பான மனைவியோடு குடும்பம் நடத்த ஆண்மகன் தயங்கி பணத்தின் பின்னாலேயே செல்வான்

வருமானம் அதிகரிக்க அதிகரிக்க ஆசைகள் பெருகி மனதளவில் வரியவர்காளாகவே வாழ்வார்கள்.

ஈகை என்பது தற்பெருமைக்காக மட்டுமே இருக்கும்.

பணபலமும் படைபலமும் எவனிடம் இருக்கிறதோ அவனே தலைவனாவான்.

பெற்ற தாய் பட்டினி கிடந்தால் கூட ஈன்ற குழந்தை பாலுக்கு அழுதால் கூட தன்னலத்தை விட்டு கொடுக்காத மனோபாவம் மேலோங்கி நிற்கும்.


அலங்கரித்து கொண்ட முட்டாளுக்கு கூட உலக அழகி என்ற பட்டம் கிடைக்கும்.

ஆசை வசப்பட்ட மனிதர்கள் பண்புகளை தூக்கி எறிந்து பிசாசுகள் போல் வாழ்வார்கள்.

நாட்டு தலைவர்கள் மக்கள் நலத்தை பற்றி சிந்திக்க மாட்டார்கள். வரிகளை வசூல் செய்வதில் காட்டும் வேகம் சேவையாற்றுவதில் இருக்காது.

உணவு உற்பத்தி செய்பவன் அவமானத்திற்கு உள்ளாவான். பணம் தரும் பயிர் மட்டுமே விளைவிக்கப்பட்டு உணவு பஞ்சம் தலை விரித்தாடும்.

பூமியெல்லாம் பயிர் செய்ய முடியாத விஷமாகி கிடக்கும்.


சூரியனின் குளிர்திரைகள் மனித சுயநலத்தால் திருடப்படும். அக்னி குண்டமென பூமி தகிக்கும்.

இந்திரிய இழப்புகளால் பலவிதமான நோய்கள் மனித உயிரை கசக்கி குடிக்கும்

செத்தவன் வாயிலிருக்கும் ரொட்டி துண்டை கூட விற்று சம்பாதிக்க நினைக்கும் மனிதர்கள் படிப்படியாக வளர்வார்கள்.

நாட்டுக்கு நாடு வீட்டுக்கு வீடு புதை குழிகளே அதிகரிக்கும்.

அந்த நிலையில் தான் கல்கி வருவார். யுகம் முடிவுக்கு வரும்.

அப்படி வருவதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது.

ஆனால் கலியின் அடையாளம் மனித சமுதாயத்தில் மிக தெளிவாக தெரிகிறது. இதை தான் கலி முத்திவிட்டது என பெரியவர்கள் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment